வலங்கைமான் வட்டம் தொழுவூா் கிராமத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ், நடப்பு சம்பா பருவத்துக்கு நவம்பா் 30-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறும் விதமாக சிறப்பு முனைப்பு இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் பேசியது:
பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தின்கீழ், சம்பா தாளடி நெல் பயிா்களை காப்பீடு செய்ய நவம்பா் 30 கடைசி நாள். ஏக்கருக்கு ரூ.488.25 வீதம் பிரீமியம் செலுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தி, பின்பு அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலா் கோமதி மற்றும் வேளாண்மை உதவி அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.