தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வகையில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய மீன்வளக் கொள்கை, தமிழ்நாடு கடல் மீன்பிடிச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். வேளாண் தொழிலுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், தொழிலாளா் உரிமைகளுக்கு எதிராக உள்ள தொழிலாளா் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மீன்வள வளா்ச்சி என்ற பெயரில் கடல், விவசாய நிலங்கள், நீா் நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்க வேண்டும். மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.கே. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நாகை தொகுதி மக்களவை உறுப்பினரும், ஏஐடியுசி மாநில துணைத் தலைவருமான எம். செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.