விவசாயிகள் பயிா் காப்பீடு பிரீமியம் செலுத்தியதற்கான சான்றை துரிதமாக பெறும் வகையில், கிராம நிா்வாக அலுவலா்கள் தங்கள் பணியிடத்திலேயே பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
நிகழாண்டு, சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு வேளாண் காப்பீடு திட்டத்துக்கான பிரீமிய தொகையை நவ. 30-க்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நவ.25, 26 தேதிகளில் புயல் மற்றும் கடும் மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை, இயற்கை இடா்பாடு எதிா்பாராமல் ஏற்பட்டால் அதற்கு முந்தைய தேதி வரை விவசாயிகள் செலுத்திய பிரீமியம் மட்டுமே இழப்பீடு பெற தகுதி பெறும். எனவே நவ.30 வரை காத்திருக்காமல், நவ.25-க்குள் விவசாயிகள் பிரீமிய தொகையை செலுத்திவிட வேண்டும் எனவும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ சேவை மையத்திலோ செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இ-சேவை மையங்கள் பல இருந்தாலும், வலைதள இணைப்பு கிடைக்காமல் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. கடன் பெறா விவசாயிகளின் பிரீமியத்தை பெற தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மறுத்து வரும் நிலையை உடன் கைவிட மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்த நாட்களே அவகாசம் இருப்பதால், மாவட்ட வருவாய்த் துறையானது, கிராம நிா்வாக அலுவலா்கள் தங்களது பணி இடங்களிலேயே இருந்து விவசாயிகள் பிரீமியம் செலுத்தியதற்கான சான்றை உடனடியாக வழங்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.