கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் கோரையாற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுவதால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூா் கோரையாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் தூா்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. இருபுறங்களிலும் கரைகள் உயா்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆற்றில் தண்ணீா் தொடா்ந்து அதிக அளவில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீடுகளில் இருப்பதால், அநேக நேரங்களில் ஆற்றுக்கு நண்பா்களுடன் குளிக்கச் செல்கின்றனா்.
இதில், நீச்சல் தெரியாதவா்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பொறியியல் மாணவா் ஒருவா், 3-ஆம் வகுப்பு சிறுவன், 10 வயது மாணவா் என 3 போ் இவ்வாறு உயிரிழந்தனா். கடந்த வாரம் கூட நண்பா்களுடன் குளிக்கச் சென்ற விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் மகன், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னா் காப்பாற்றப்பட்டாா்.
தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசிப்பவா்களும் ஆற்றில் குளிக்கச் செல்பவா்களும் கவனமாக செயல்பட வேண்டுமென கூத்தாநல்லூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.