திருவாரூா்: திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) டி. அறிவழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போக்குவரத்துத் துறையில் வரி கட்டாத மற்றும் இதர குற்றங்களுக்காக பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, வாகன உரிமையாளா்கள் மற்றும் நிதியாளா்களால் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல், திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சுமாா் 14 பல்வேறு வகையான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புவோா் அக்.15-ஆம் தேதிக்குப் பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் திருவாரூரில் விண்ணப்பக் கட்டணம் ரூ.500 இணையவழி மூலமாக செலுத்தி ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி நவ.10, பிற்பகல் 3 மணி ஆகும். பூா்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்களை, திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நவ. 13-ஆம் தேதிக்குள், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் சோ்க்க வேண்டும். முன்வைப்புத் தொகையாக ரூ.10,000-ஐ வங்கிக் கேட்பு வரைவோலை மூலம் செலுத்துவோா் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.
ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நேரங்களில் அக்.15-ஆம் தேதி முதல் நவ.13ஆம் தேதி வரை பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.