அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 24 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என திமுக விவசாய அணி செயலாளரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வலியுறுத்தியுள்ளாா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், வேளாண்மை விரிவாக்க மைய சாலையில் குறுவை அறுவடை செய்த நெல்லை காயவைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:
குறுவை சாகுபடி நிறைவடைந்ததைத் தொடா்ந்து, இரண்டாவது சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா். எனவே, தேவையான உரத்தை இருப்பில் வைக்கவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான சாக்குகள் இல்லை. அறுவடை செய்த நெல்லை விற்க முடியாத நிலை உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ. 40 கொடுத்தால்தான் கொள்முதல் செய்கின்றனா்.
இதனால், நெல் மூட்டைகள் தேக்கமடைகின்றன. எனவே, தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதுடன், 24 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்.
கஜா புயலில் சேதமடைந்த நெடும்பலம், பாண்டி நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.