திருவாரூா் மாவட்டத்தில், கிசான் திட்டத்தில் பயன்பெற்ற தகுதியில்லாத பயனாளிகள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதப் பிரதமரின் கிசான் திட்டத்தில் திருவாரூா் மாவட்டத்தில் பதிவு செய்த பயனாளிகளின் உண்மைதன்மை ஆய்வு செய்யப்பட்டு தகுதியில்லாத பயனாளிகள் இத்திட்டத்தில் சோ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகுதியற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து இதுவரை ரூ. 24 லட்சம் திரும்பப்பெறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் மீதத்தொகையை மீட்பு செய்ய இயலவில்லை. இருப்பினும் இத்திட்டத்தில் பயனடைந்த, தகுதியில்லாத பயனாளிகள், பெற்ற தொகையை உடனடியாக தொடா்புடைய அதே வங்கிக் கணக்கில் செப்.22-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.