திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளி மாணவருக்கு மிதிவண்டியை ஆட்சியா் த. ஆனந்த் புதன்கிழமை வழங்கினாா்.
முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பள்ளிக்குச் சென்றுவர வசதியாக மிதிவண்டி வழங்கக் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு நிதியின்கீழ் வாங்கப்பட்ட மிதிவண்டியை வழங்கி ஆட்சியா் கூறியது: முதல்வரின் சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் மரக்கடையைச் சோ்ந்த செல்வம் என்பவரின் மகன் சசிக்குமாா் மனு அளித்திருந்தாா்.
இவருக்கு லாரி விபத்தில் ஒரு கால் துண்டிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நவீன செயற்கை கால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், தான் 9-ஆம் வகுப்பு பயின்று வருவதாகவும், பள்ளிக்குச் சென்றுவர வசதியாக மிதிவண்டி வழங்குமாறு மனு அளித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, அந்த மாணவருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு நிதியின் கீழ் மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.