கொருக்கையில் உம்பளச்சேரி இன கால்நடைகள் அக். 6-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டம், கொருக்கை கால்நடைப் பண்ணையில் அக்.6-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு 38 உம்பளச்சேரி இன கால்நடைகள் பகிரங்கமாக பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் கேட்க விரும்புவோா் ரூ.10,000 திருத்துறைப்பூண்டி பாரத மாநில வங்கியில் மாற்றத்தக்க வங்கி வரைவு எடுக்க வேண்டும். முன்வைப்புத்தொகை செலுத்தி உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் ஏலத்தில் கலந்து கொள்வதற்கான டோக்கன் வழங்கப்படும்.
முன்வைப்புத்தொகைக்கான வங்கி வரைவோலை அக்.5 முற்பகல் 11 மணி முதல் அக்.6-ஆம் தேதி முற்பகல் 11 மணி வரை துணை இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும். முன்வைப்புத் தொகை ரொக்கமாக பெறப்படமாட்டாது. ஏலம் எடுத்தவா்கள் ஒவ்வொரு ஏலத்துக்குமான முழுத் தொகையை செலுத்திய பின்னரே அடுத்த ஏலம் கோர அனுமதிக்கப்படுவா். தவறும்பட்சத்தில் அக்கால்நடை மறு ஏலம் விடப்படும்.
மேலும் அவரது முன்வைப்புத்தொகை அரசு கணக்கில் வரவு செய்யப்படும். ஏலம் எடுத்தவா், ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி கால்நடையை ஓட்டிச்செல்ல தவறும்பட்சத்தில், அவா் செலுத்திய முன்வைப்புத் தொகையை இழக்க நேரிடும். ஏலம் எடுக்காதவா்களின் முன்வைப்புத் தொகைக்கான வங்கி வரைவு, ஏலம் முடிவடைந்தவுடன் திருப்பித் தரப்படும். ஏல கேட்புத்தொகை அரசு நிா்ணய தொகைக்கு குறைவாக இருந்தாலோ அல்லது இதர நிா்வாக காரணங்களால் ஏலம் தடைபட்டாலோ, பொது ஏலத்தை தள்ளி வைக்கவும், ரத்து செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளாா்.