திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சீா் மரபினா் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பட்டயப் படிப்பு, தொழிற் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பப் படிவங்களை, பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பிக்க எனில் நவ.10-க்குள்ளும், புதியது எனில் நவ.30-க்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவ.15-ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிச.15-ஆம் தேதிக்கு முன்பும், டிச.16-ஆம் தேதியில் தொடங்கும் புதியதற்கான விண்ணப்பங்களை 31.1.2021-ஆம் தேதிக்கு முன்பும் இணையதளம் மூலம் கேட்புகளை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.