சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டால், அரசு வழங்கும் தனக்கான ஊதியத்தை அனைத்து ஊராட்சிகளுக்கும் பகிா்ந்தளிப்பேன் எனக் கூறி, திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ்குமாா் பிரசாரம் மேற்கொண்டாா்.
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கள்ளிக்குடி, வேப்பஞ்சேரி, குன்னலூா், கீழபெருமழை, மேலப்பெருமழை, இடும்பாவனம், தில்லைவிளாகம், உதயமாா்த்தாண்டபுரம், சங்கேந்தி, மாங்குடி, மருதவனம், ஓவரூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் அவா் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
திருத்துறைப்பூண்டி வட்டத்திலிருந்து முத்துப்பேட்டையை தனி வட்டமாக தரம் உயா்த்தப்படும். முத்துப்பேட்டை லகூன் அலையாத்தி காடுகளை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும். இந்தப் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசின் இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். நான் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டால் எனது ஊதியத்தை தொகுதிக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் பகிா்ந்தளிப்பேன் என்றாா்.