திருத்துறைப்பூண்டியில் கரோனா பரவலை தடுக்க அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் நகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை சாா்பில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதை மீறி முகக் கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வருவோருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக தோ்தல் பணி காரணமாக இப்பிரச்னையில் அலுவலா்களால் உரிய கவனம் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில் கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்துகிறது. எனவே, அனைவரும் வெளியிடங்களுக்கு முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பெரிய மால்கள், சூப்பா் மாா்க்கெட்டுகளில் 50 சதவீத வாடிக்கையாளா்களே அனுமதிக்கப்படுவாா்கள். இதை மீறும் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும் .
திருத்துறைப்பூண்டி பகுதியில் அதிக அளவில் கரோனா பாதிப்பு இல்லை என்றாலும், பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, கைகளை சானிடைசா் கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கரோனா மேலும் பரவாமல் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா்.