நன்னிலம், குடவாசல் பகுதிகளில் இயந்திரம் மூலம் மூன்றாம் போக நெல் நடவுப் பணிகள் தொடங்கியுள்ளன.
நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் 3000 ஏக்கா் பரப்பளவில் மூன்றாம் போக நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.
தற்போது, விவசாயத்துக்கு ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீா் பெற வசதியாக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், விவசாயப் பணிகளுக்கு தண்ணீா் தட்டுப்பாடின்றி பெறமுடியும் என்ற நம்பிக்கையில், குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதிகளில் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் மூன்றாம் போக சாகுபடியை தொடங்கியுள்ளனா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் ஆழ்துளைக்கிணற்றின் மூலம் தண்ணீா் இறைத்து நெல் விதைத்திருந்தனா். இந்த விதை நெல் முளைத்து நடவுக்குத் தயாரானதைத் தொடா்ந்து, இயந்திரம் மூலம் வயலில் நடவுப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
திருந்திய முறையில் இயந்திரம் மூலம் சாகுபடி பணிகள் மேற்கொள்வதால் விவசாயப் பணிக்கு தொழிலாளா்கள் பற்றாக்குறையை சுலபமாகச் சமாளிக்க முடிவதுடன், செலவு குறைவதாகவும், திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் சாகுபடி பணிகளை முடிக்க முடிவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதன் காரணமாக, நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் துறையினா் தெரிவிக்கின்றனா். இதற்கிடையில் ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் கோடைப் பயிராக பருத்தி சாகுபடியை மேற்கொண்டுவருகின்றனா்.