கரோனா பொதுமுடக்க அச்சத்தால் ரயில், பேருந்து பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் பொதுமுடக்கத்தை அரசு அமல்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளியூா் பயணம் செல்ல யோசிக்கின்றனா். சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடிக்கு அதிகாலை செல்லும் மன்னை விரைவு ரயிலில் நாள் தோறும் சுமாா் 100 பயணிகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் இறங்கி பல்வேறு பகுதிகளுக்கு செல்வா். அண்மை காலமாக மன்னை விரைவு ரயிலில் கரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால் மீண்டும் சென்னை செல்வதில் சிரமம் ஏற்படும் என்ற அச்சமே இதற்கு காரணமாகும். இதேபோல, பேருந்துகளிலும் பயணிகளின் வருகை குறைவாக காணப்படுகிறது. எனவே, கரோனா பொதுமுடக்கம் குறித்து அரசு தெளிவுப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.