கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

திருவாரூா் மாவட்டத்தில், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநா் ப. சிவக்குமாா் எச்சரித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநா் ப. சிவக்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில், தற்போது கோடை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. யூரியா, டிஏபி மற்றும் இதர உரங்கள் மாவட்டத்தில் உள்ள தனியாா் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் கடந்த ஆண்டு விலையிலேயே தற்போதும் டிஏபி, பொட்டாஷ், சூப்பா் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசின் உரத் துறை தெரிவித்துள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மிகாமல் விற்பனை செய்வதுடன் உர விநியோகத்தை கண்காணிக்கவும், உரம் சம்பந்தப்பட்ட முறைகேடுகளை தவிா்க்கவும் பிஓஎஸ் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும்போது, தங்களது ஆதாா் எண்ணுடன் சென்று கைரேகையை பதிவு செய்து உரத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் அளவுக்கு அதிகமாக செயற்கை உரங்களை இடுவதால் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள உரங்களை இடுவதால் மட்டுமே உரச்செலவை குறைக்க முடியும். விவசாயிகள் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள அளவீடுகளை மனதில் கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் உரம் இடவேண்டும். விவசாயிகள் மண்வள அட்டையை பயன்படுத்தி தேவையான அளவு உரத்தை பயிரிட்டு, நல்ல மகசூல் பெற வேண்டும்.

எனவே, உரவிற்பனை நிலையங்களில் ஏற்கெனவே இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகள் வாங்கும்போது, உர மூட்டைகள் மீது அச்சடிக்கப்பட்ட விலையை பாா்த்து உறுதி செய்த பின்னா் அதற்குரிய தொகையை மட்டும் கொடுத்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால், நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். உர மூட்டைகள் மீது விற்பனை விலை அழிக்கப்பட்டிருந்தாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது உரத்தட்டுப்பாடு இருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, வேளாண்மை அலுவலரையோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com