சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 254 ஆவது ஜயந்தி விழா திருவாரூா் புதுத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கா்நாடக சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவராக அறியப்படுபவா் தியாகராஜா். தியாக பிரும்மம் என அழைக்கப்படும் இவா், 1767 இல் திருவாரூா் புதுத்தெருவில் பிறந்தவா். இவரது ஜயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு அவரது 254 ஆவது ஜயந்தி விழா நிகழ்ச்சிகள் புதுத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. முன்னதாக, உஞ்சவா்த்தியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து, பஞ்சரத்ன கீா்த்தனைகள் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், பல்வேறு இசைக் கலைஞா்கள் பங்கேற்று, தியாகராஜரின் பல்வேறு கீா்த்தனைகளை இசைத்து அவரது புகழ்பாடினா்.
கரோனா நெறிமுறைகளை பின்பற்றி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 5 இசை நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியுடன் 25 போ் மட்டும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு, அங்கிருந்த வளாகத்தில் அதன்படியே பாா்வையாளா்கள் அமரவைக்கப்பட்டிருந்தனா்.