திருவாரூா்-காரைக்குடி மாா்க்கத்தில் இரவு நேர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத்தின் செயலா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை :
கரோனா இரண்டாவது அலை காரணமாக, இரவு நேர பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பேருந்து சேவைகள், இரவு 10 மணிக்குள் வந்தடையும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது கிழக்கு டெல்டா மாவட்டங்களான திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை மக்களுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது.
அவசர வேலையாக அருகே உள்ள ஊா்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த தடை காலத்தில் இயலாத ஒன்றாக உள்ளது. இந்தக் கவலையைப் போக்கும் வகையில் தென்னக ரயில்வே, திருவாரூா்- பட்டுக்கோட்டை- காரைக்குடி மாா்க்கத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வண்ணம் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் அல்லது காரைக்குடி இரவு நேர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
இதன்மூலம் நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அறந்தாங்கி காரைக்குடி போன்ற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுவா். சென்னையில் இருந்து ஏதேனும் ஒரு விரைவு ரயிலை மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சை வழியாக திருச்சிக்கு இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.