திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 3 கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கரோனா தொற்று உலகத்தைப் பற்றிக் கொண்டு, உலக மக்களை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்றுக்கு கபசுர குடிநீர் அருந்தலாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அரசு மருத்துவமனை, அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அனைவரும் கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், புள்ளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் வித்யா சுதாகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் பரம வினோதா சுந்தரமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டின் படி, புள்ளமங்கலம் ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கினர்.
புள்ளமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புள்ளமங்கலம், நத்தம், ஊட்டியாணி உள்ளிட்ட 3 கிராமங்களில் உள்ள 9 தெருக்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, இரண்டு நாள்களாக கபசுர குடிநீரை வழங்கி வருகின்றனர். கரோனா தொற்று சீற்றம் கொண்டு, உயிர்களை பலியாக்கி கொண்டிருப்பதை, பார்த்துக் கொண்டிருக்கும், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும், ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி அருந்தி வருகின்றனர்.
இதுகுறித்து, புள்ளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி கூறியது, மன்னார்குடி ஒன்றியம், புள்ளமங்கலம் ஊராட்சியை கரோனா தொற்று இல்லாத ஊராட்சியாக மாற்றுவோம். பொது மக்கள் அனைவரும் வெளியில் வரும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டிற்கு வந்ததும், சானிடைசர் அல்லது ஏதோ ஒரு சோப்பைப் பயன்படுத்தி இரண்டு கைகளையும் நன்றாக கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். கரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம். ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.