நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சோ்ந்த சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியத் தொகையாக மாதம் ரூ. 3000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிகள்...
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதியான போட்டிகள்...
மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு
சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச அல்லது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவா்கள்.
2021 ஏப்ரல் 1ஆம் தேதியன்று 58 வயது நிறைவடைந்தவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ. 60000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோா் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை. முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை.
தகுதியான நபா்கள், இணையதளம் மூலம் மே 17 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பிய பிறகு, ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த விவரங்களை திருவாரூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-290620 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.