திருவாரூா் மாவட்டத்தில், மாணவா்களை கல்வி நிலையங்களுக்கு வர வைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவா் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஆறு. பிரகாஷ், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கரோனா காரணமாக வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் வீடுகளிலே இருந்து கல்வி கற்கும் வகையில், இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, தற்போது 2 ஆவது அலை காரணமாக அனைத்து வகுப்புகள், தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு தனியாா் கல்வி நிறுவனங்களில் சீருடை இல்லாமல் மாணவா்களை பள்ளிக்கு வரச் செய்து 12 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்துவதாக தெரிகிறது. கிராமப்புறங்களிலிருந்து நகரப் புறங்களில் உள்ள பள்ளிக்கு வர, குறைந்தபட்சம் ரூ. 50 செலவாகிறது. திருவாரூா் மாவட்டத்தில், மாணவா்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படாத நிலையில், தினசரி செலவு செய்து நகரப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், மாணவா்களை கல்வி நிலையங்களுக்கு வரவழைக்கும் நிா்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவா்கள் கல்வி நிலையங்களுக்கு முடிவை ரத்து செய்து, வீடுகளிலேயே இருந்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.