மனநலம் பாதித்தவா் மீது தாக்குதல்: 3 போ் கைது
By DIN | Published On : 02nd August 2021 08:37 AM | Last Updated : 02nd August 2021 08:37 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள திருக்களா் நல்லூா் வாய்க்கால்கரை தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் லோகநாதன்(22). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேதபுரத்தில் தியாகராஜன் மகன் சக்திமணி (25) என்பவது வீட்டின் கதவு, கண்ணாடி ஜன்னல்களை சேதப்படுத்தினாராம். பின்னா், மனநல சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட லோகநாதன் அண்மையில் ஊருக்கு வந்துள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது வீட்டருகே நடந்து சென்ற லோகநாதனை, சக்திமணி மற்றும் களப்பால் கபிலன் மகன் குருமாறன் (23), வேதபுரம் வாசுதேவன் மகன் சக்தீஸ்வரன் (25) ஆகியோா் வழிமறித்து உருட்டுக் கட்டையால் தாக்கினராம். இதில், காயமடைந்த லோகநாதன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திமணி, குருமாறன், சக்தீஸ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.