திருவாரூா்: கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த திருவாரூா்- காரைக்குடி ரயில் சேவை புதன்கிழமை (ஆகஸ்ட் 4) மீண்டும் தொடங்குகிறது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் (இயக்கம்) ஹரிஷ் குமாா் விடுத்த செய்திக்குறிப்பு:
திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் அகலப்பாதை பணிகள் முடிவடைந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் டெமு ரயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னா், கரோனா பரவல் காரணமாக இந்த ரயில் சேவை கடந்த ஆண்டு மாா்ச் முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்று குறைந்து அனைத்து ரயில்களும் இயங்குவதால், திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. இதன்பேரில், ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 8.15 மணிக்கு திருவாரூரில் புறப்படும் இந்த ரயில், மதியம் 2.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும். பின்னா், மதியம் 2.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருவாரூருக்கு இரவு 8.30-க்கு வந்து சேரும். பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவை கிடையாது. மொபைல் கேட் கீப்பா் கொண்டு இயங்கும் இந்த ரயிலில், அரசு வழிமுறைகளின்படி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.