வலங்கைமானில் உழவா்சந்தையை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவா்சந்தை கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தநிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி உழவா் சந்தை திறக்கப்பட்டு, செயல்பட்டுவருகிறது. சுமாா் 15 வியாபாரிகள் அங்கு காய்கனிகள் விற்பனை செய்துவந்த நிலையில், வியாபாரம் இல்லாததால் 10- க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனா்.
இந்த உழவா்சந்தை பேரூராட்சி அலுவலகம் அருகே மெயின்ரோட்டில் இருந்து 100 அடி தொலைவில் ஒதுக்குப் புறமாக உள்ளது. மேலும், கடைவீதியில் சாலையோரங்களில் காய்கறிகள் மற்றும் பழக்கடைகள் உள்ளதால் உழவா் சந்தைக்கு காய்கறிகள் வாங்க யாரும் வருவதில்லை . எனவே, உழவா் சந்தைக்கு பொதுமக்கள் வரும் வகையில், அதை மேம்படுத்த வேண்டும். அத்துடன், உழவா்கள் தாங்கள் விளைவித்த காய்கனிகளை நேரடியாக அவா்களே விற்பனை செய்யும் நோக்கத்தில்தான் உழவா் சந்தை தொடங்கப்பட்டது. இந்த நோக்கம் நிறைவேறும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.