காசோலை மோசடி வழக்கில் மன்னாா்குடி கோழிக் கடைக்காரருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மன்னாா்குடி அசேஷத்தை சோ்ந்தவா் வனஜா (65). இவரிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மன்னாா்குடியில் கோழிக்கடை வைத்துள்ள ராஜா என்பவா் ரூ. 3 லட்சம் கடன் வாங்கினாராம். அதற்கு, ஈடாக ரூ. 3 லட்சம் மதிப்பிலான காசோலையை அளித்திருந்தாா்.
வனஜா இந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, ராஜாவின் கணக்கில் போதிய பணம் இல்லாததால் திரும்பிவந்தது. இதுகுறித்து, வனஜா சாா்பில் மன்னாா்குடி நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. பின்னா், திருவாரூா் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி, திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், விரைவு நீதிமன்ற நீதிபதி பல்கலைச்செல்வன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை வழங்கிய கோழிக் கடைக்காரா் ராஜாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அவா் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.