நீடாமங்கலம்: நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடராஜப் பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஹரிஹரன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயிலில் அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. நடராஜப்பெருமான், சிவகாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிவகண வாத்தியங்கள் முழங்க சுவாமி வீதியுலாவும்,
அதனைத் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் முற்றோதல் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோயில், நரிக்குடி எமனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.