அரசுப் பேருந்துகளுக்கான உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டை சரிசெய்யவேண்டும் என நன்னிலம் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் ஆா். பிரபு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: பொதுமக்கள் வெளியூா் பயணங்களுக்கு அரசுப் பேருந்தையே நம்பியுள்ளனா். இந்நிலையில் அரசுப் போக்குவரத்துக்கழக கும்பகோணம் மற்றும் நாகை மண்டலத்துக்குள்பட்ட பணிமனைகளில் பேருந்துகளுக்கான டயா்கள், டியூப்கள், பிரேக்லைன், சிலாக் அஜெஸ்னா், பல்புகள் மற்றும் முகப்பு விளக்குகள் உள்ளிட்ட உதிரிப்பாகங்கள் பற்றாக்குறையால் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ள சில பழையப் பேருந்துகள் பயணத்தின்போது பழுது ஏற்பட்டு பாதிவழியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கூலி வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்கள், தினக்கூலி தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்டோா் உரிய நேரத்தில் தாங்கள் சென்றடையவேண்டிய இடத்துக்கு செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனா்.
பலசமயங்களில் பேருந்து பழுது காரணமாக மாற்றுவழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பல வழித்தடங்களில் பேருந்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இவ்வாறு பேருந்து சேவையில் ஏற்படும் குறைபாடு காரணமாக அனைத்துப் பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே தமிழக முதல்வா் உடனடி கவனம் செலுத்தி, தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கும் தேவையான அளவுக்கு பேருந்து உதிரிப் பாகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.