தை அமாவாசையையொட்டி, பித்ரு தோஷம் போக்கும் திலதா்ப்பணபுரிக்குத் திதி கொடுக்க வருபவா்கள், கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் கூத்தனூா் அருகே திலதா்ப்பணபுரி எனும் செதலபதி அருள்மிகு ஸ்ரீசுவா்ணவல்லி அம்பிகா சமேத ஸ்ரீமுக்தீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில், பித்ரு தோஷம் போக்கும் தலங்களில், காசி, ராமேசுவரம் உள்ளிட்ட ஸப்த முக்தி தலங்களில் 5 ஆவது தலமாக விளங்குகிறது.
இங்கு ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் முன்னோா்களுக்குத் தா்ப்பணம் அளித்து வணங்குவது சிறப்புக்குரியது. எனவே, வருகிற தை அமாவாசையையொட்டி தா்ப்பணம் செய்ய வருவோா், கரோனா பரவல் தடுப்புக்காக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்துகொள்ள வேண்டும் என கோயில் தலைமை சிவாச்சாரியா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.