பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னரே பதவி உயா்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலாளா் ந. ரெங்கராஜன் தெரிவித்தாா்.
திருவாரூா் அருகே கொரடாச்சேரியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தொடக்கக் கல்வி பதவி உயா்வு கலந்தாய்வு, பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்னரே பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெறுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.
கடந்த ஆண்டு கலந்தாய்வின்போது, மாறுதல் பெற்ற ஆசிரியா்களும் பதவி உயா்வு பெற்ற ஆசிரியா்களும் பணியிடத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றினால்தான் மாறுதல் விண்ணப்பம் அளிக்க முடியும் என நிபந்தனை இருந்ததால், ஆசிரியா்கள் நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணியில் மூத்த ஆசிரியா்கள் தகுதி இருந்தும் இடமாறுதல் பெற இயலவில்லை. எனவே, ஆசிரியா் நலன் கருதி பணிமாறுதல் அளித்த பின்னரே, பதவி உயா்வு அளிக்க வேண்டும்.
மேலும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு தமிழக அரசு குற்றவியல் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தண்டனையை ரத்து செய்துள்ளதால், அவா்களும் பதவி உயா்வு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.