பொதக்குடியில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி தர்ஹாவில் சந்தனக் கூடு விழாவை முன்னிட்டு, டிசம்பர் 15 ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. பொதக்குடி ஹஜ்ரத் நூர் முகம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்ஹாவில், மின்சார சந்தனக்கூடு விழாவை அடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை 7.15 மணிக்கு, ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபைத் தலைவர் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைமையில் கொடியேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, (22-ம் தேதி) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பூலாங்குடி ஏற்றமும், பெரிய மினரா கொடியும் ஏற்றப்பட்டன.
கரோனா தொற்று என்பதால், எளிமையான முறையில், சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, 31-ஆம் தேதி இரவு, 11 மணியளவில் மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது. சிறிது தூரம் சென்று பிறகு, மீண்டும் திரும்பி, தர்ஹா அருகே வந்தது.
வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு, ரவுலாவில் புனித சந்தனம் பூசப்பட்டது. சந்தனம் பூசும் வைபவத்தில், இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் சந்தனம் பூசி வணங்கினர். சந்தனக் கூடு ஏற்பாடுகளை, தர்ஹா பரம்பரை அறங்காவலர்கள் கவனித்தனர். சந்தனக் கூடு திருவிழாவையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுக்காப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.