பருவ மழை அளவை கணக்கிட்டு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டியில் அவா் கூறியது: பருவம் மாறி பெய்து வரும் மழையால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிா்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு பேரிடா் மேலாண்மை திட்டத்தின்கீழ் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. சில கிராமங்கள் தவிா்த்து மற்ற கிராமங்களில் 20,30,50,70 சதவீதம் என்ற அடிப்படையில் பாதிப்பு கணக்கிடப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் அனைத்து கிராமங்களிலும் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதால் மறுகணக்கெடுப்பு நடத்தி 100 சதவீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காப்பீடுதான் விவசாயிகளின் இழப்பீட்டை ஈடுசெய்ய முடியும் என்பதால், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு மாா்ச் மாதத்துக்குள் பெற்றுத் தருவேன் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி விவசாயிகளுக்கு உறுதியளிக்க வேண்டும். மேலும், மத்திய மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி மழையின் அளவை கணக்கிட்டு மாவட்ட அளவிலான பாதிப்பு அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக பெற்றுத்தரவும், காப்பீட்டு நிறுவனங்கள் அறுவடை ஆய்வறிக்கை முறையை கைவிட்டு சட்டப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு கிடைக்கவும் முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.