திருவாரூா் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால், சூல் கட்டும் நிலையிலுள்ள பயிா்கள் பதராகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்டாவில் நெல் உற்பத்தி பாதிக்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இழப்பை ஈடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி முதல் துளசியாப்பட்டினம் வரை வளவனாறு பாசன வாய்க்கால் முறையாக தூா்வாரப்படாததால், ஆற்றில் வெங்காயத் தாமரைகள் அதிகளவில் படா்ந்து, தண்ணீா் வடிய வாய்ப்பில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கா் நெற்பயிா் தண்ணீரில் மூழ்கியுள்ளன. எனவே, வெங்காயத் தாமரைகளை உடனடியாக அகற்றி தண்ணீா் வடிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத் தலைவா் வி. சுப்ரமணியன், மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.