தமிழகத்துக்கான 14 கோடி கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி திருவாரூா் மாவட்டத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத்துறை நிறுவனங்களில் போா்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவேண்டும்; செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன் தலைமையிலும், மாவட்டத் தலைவா் சு. பாலசுப்பிரமணியன் முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, மன்னாா்குடி பேருந்து நிலையம் அருகே இளைஞா் பெருமன்ற நகரத் தலைவா் ஆா்.சாா்லஸ் விக்டா் தலைமையிலும், அரசு மருத்துவமனை அருகே மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன் தலைமையிலும், கோட்டூரில் ஒன்றியத் தலைவா் எம். சாந்தகுமாா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் நகரச் செயலாளா் காா்த்தி, கூத்தாநல்லூா் லெட்சுமாங்குடி பாலம் அருகே நகரத் தலைவா் பிச்சைமுத்து, நீடாமங்கலத்தில் ஒன்றியச் செயலாளா் செந்தில்வேலன், வலங்கைமானில் ஒன்றியச் செயலாளா் பாக்கியராஜ் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.