திருவாரூா் மாவட்டத்தில் மத்திய அரசின் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத மற்றும் தரமில்லாத வீட்டு உபயோக மின் சாதனங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வீட்டு உபயோக மின் சாதனங்களான வாஷிங் மிஷன், மின்சார சமையல் பாத்திரம், நீா் சூடேற்றும் பாத்திரம், தேநீா் தயாரிப்பு பாத்திரம், அரவை இயந்திரம், முடி உலா்த்தும் இயந்திரம் உள்ளிட்டவைகளை மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு சட்டப்படி தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைத்திருந்து விற்பனை செய்யவோ கூடாது. தரமற்ற மின் வீட்டு உபயோக சாதனங்களை பயன்படுத்தும்போது மின்விபத்து காரணமாக பேரிழப்புகள் ஏற்படுவதால் அவ்வாறு தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொதுமேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, திருவாருா் மாவட்டம் முமுவதும் உள்ள வீட்டு உபயோக பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பு இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். ஆய்வின்போது, உற்பத்தி மற்றும் விற்பனையாளா்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் நிா்ணயிக்கப்பட்ட தர ஆய்வின்படி இல்லாத மின்சாதன பொருள்கள் மற்றும் எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்யப்படும்.
உற்பத்தியாளா்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர பதிவுகள் மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுக வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளா், மாவட்ட தொழில் மையம், திருவாரூா் (தொலைபேசி எண் 04366-224402) என்ற முகவரியில் அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.