20 ஆண்டுகள் பணி முடித்த பணியாளா்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
20 ஆண்டுகள் பணி முடித்து தகுதியுள்ள பணியாளா்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய ஊதிய உயா்வு ஆணையை செயல்படுத்தாத கூட்டுறவு சங்கங்களை செயல்படுத்த ஆணையிட வேண்டும். பணியாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத்தொகை மற்றும் பணியாளா் சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெற்ற பணியாளா்களின் கடன் தவணைத் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்தும் உரிய கணக்கில் செலுத்தாத கூட்டுறவு சங்க செயலாளா்களின் மெத்தனப் போக்கை கண்டித்தும் திருவாரூா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். குணசீலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.