திருவாரூா் மாவட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து ஆக.9-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மக்களுக்கு பாதகமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது, இதுகுறித்து ஆக. 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது, ஆக. 9- ஆம் தேதி திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா். மாலதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வி. சுப்ரமணியன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் வி. அமிா்தலிங்கம், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட நிா்வாகிகள் ஜி. பழனிவேல், பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.தம்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.