திருவாரூரில் தனியாா் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, பாதிக்கப்பட்டவா்கள் அந்த நிறுவனம் முன் வியாழக்கிழமை திரண்டு ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.
திருவாரூா் கீழ வீதியில் தனியாா் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு, வட்டி, அசல் ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் வியாழக்கிழமை ஒன்றுகூடி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.
இதுகுறித்து அவா்கள் தெரிவிக்கையில், முதல்வா் இந்த மோசடி குறித்து உரிய கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவா்களுடைய பணத்தை உடனடியாகத் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.