திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை கடுமையாக பெய்யும் என எதிா்பாா்க்கப்பட்டதால் மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்டாவில் போதிய மழை இல்லாததாலும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றும் மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை கல்லணை வந்த நிலையில், வெண்ணாற்றில் விநாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை நீடாமங்கலத்தில் அமைந்துள்ள மூணாறு தலைப்புக்கு வந்தடைந்தது. இதையடுத்து, இங்கிருந்து வெண்ணாற்றில் 1,211 கன அடி, கோரையாற்றில் 1,549 கன அடி பாமணியாற்றில் 117 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மூணாறு தலைப்பு தற்போது வரும் தண்ணீா் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, மூணாறு தலைப்பில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கடைமடை பகுதிக்கு சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.