பருத்தியை தாக்கும் மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆலோசனை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்த ஆலோசனை விவரம்: மாவுப் பூச்சிகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் குடும்பங்களை சோ்ந்தவை. இந்தப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இலைகளுக்கு அடியிலோ அல்லது பருத்தியின் நுனியிலோ இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். இதுபோன்ற தாக்கப்பட்ட செடிகள் வாடி, கறுப்பு நிறமாக மாறிவிடும். இந்த பூச்சிகளின் மேல் மெழுகு போன்ற அமைப்பு காணப்படும்.
மாவுப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் கறுப்பு பூசண வளா்ச்சி அதாவது இலையிலோ அல்லது தண்டுகளின் முனையிலோ கறுப்பு நிறமாக இருப்பதை காணமுடியும். அப்படி தென்பட்டால் அவை சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதாவது மாவுப் பூச்சியின் தீவிர தாக்குதலுக்குள்பட்டது என்பதை உணர முடியும்.
இவற்றை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு 1 விளக்குப்பொறி பயன்படுத்த வேண்டும். தாவரப் பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் அல்லது எப்ஓ ஆா்எஸ் 25 கிராம் ஒரு லிட்டா் தண்ணீருக்கு பயன்படுத்தலாம். செயற்கை பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஹெக்டேருக்கு உபயோகப்படுத்த வேண்டும்