முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
வலங்கைமானில் அமைச்சர் ஆர்.காமராஜிடம் உடல்நலம் விசாரித்து கண்ணீர் விட்ட பெண்கள்
By DIN | Published On : 14th March 2021 07:10 PM | Last Updated : 14th March 2021 07:10 PM | அ+அ அ- |

அமைச்சர் காமராஜ்.
வலங்கைமானில் அமைச்சர் ஆர்.காமராஜிடம் உடல்நலம் விசாரித்து பெண்கள் கண்ணீர் விட்டனர்.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு பணிகளில் அமைச்சர் ஆர்.காமராஜ் ஈடுபட்டு வருகிறார் அவர் சொல்லுகின்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்பும் வாழ்த்தும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்தும், தற்போதைய உடல் நலம் குறித்தும் ஆர்வத்துடன் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில் வலங்கைமான் ஒன்றியம் அவலிவனல்லூர் கிராமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, அங்கு குழுமியிருந்த பெண்களை அமைச்சர் ஆர்.காமராஜ் சந்தித்தார். அவர்களுக்கு மகளிர் தினம் மற்றும் அன்னையர் தின வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் அமைச்சரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். அது தொடர்பாக அவர்களிடம் விளக்கி அமைச்சர், தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அமைச்சரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்து கேட்ட பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். கடந்த பத்தாண்டுகளாக அமைச்சர் தங்கள் பகுதிகளுக்கு பணிகளை பெண்கள் நினைவு கூர்ந்தனர்.
தங்கள் வீட்டு சுக துக்கங்களில் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் ஆறுதலையும் தெரிவித்ததையும் அமைச்சரிடம் பெண்கள் பகிர்ந்து கொண்டனர். உடல்நிலை தேறி இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் மீதும், அதிமுக அரசு மீதும் நாங்கள் நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் இருக்கிறோம். அதனால் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து உங்களை வெற்றிபெறச் செய்வோம்.
இது எங்கள் கடமை. எனவே நீங்கள் உங்கள் உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். அவர்களை ஆறுதல் படுத்திய அமைச்சர் உங்களைப் போன்ற சகோதரிகள் இருக்கின்றபோது எனக்கு எதுவும் ஆகிவிடாது. எப்பொழுதும் போல் உங்கள் சகோதரனாக உங்களுடனேயே இருப்பேன். என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். இந்த நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த நெகிழ்வை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது.