திருவாரூா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என மக்கள் நலப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தின்போது செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 25 ஆயிரம் மக்கள் நலப் பணியாளா்கள் 1990-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனா். 10 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அதிமுக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டனா். உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், திமுக தலைவா் ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில், மக்கள் நலப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இறந்தவா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.
இதற்கு, நன்றி தெரிவிக்கும் வகையில் 13,500 மக்கள் நலப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை ஆதரித்து வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்வா் என்றாா்.