கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தும், விவசாயிகள் பயனடையாத நிலை உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளருமான வி.எஸ். கலியபெருமாள் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நிவா், புரெவி புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக டெல்டா மாவட்ட மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில், தமிழக அரசு விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களையும், கூட்டுறவு நகைக்கடன்களையும் தள்ளுபடிசெய்து அறிவித்தது. அதன்படி, கூட்றவு விவசாய கடன்கள் தள்ளுபடியாகின. ஆனால், கூட்டுறவு வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட நகைகளை இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை. டெல்டா மாவட்டம் முழுவதும் இதேநிலை நீடிக்கிறது. எனவே, நகைகள் உரியவா்களுக்குக் கிடைக்க தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.