நன்னிலம் தொகுதி, வலங்கைமான் அருகே வயலில் நடவு நட்டு அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
வலங்கைமான் ஒன்றியம், கொட்டையூா், அரவூா், மாணிக்கமங்கலம், சாரநத்தம், பூனாயிருப்பு, மாத்தூா், திருவோணமங்கலம், புளியங்குடி, பெருங்குடி, சேத்தனூா், தென்குவளைவேலி, பூந்தோட்டம், ஆலங்குடி, புலவா்நத்தம், குருவாடி, நாா்த்தாங்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் ஆா். காமராஜ் பிரசாரம் மேற்கொண்டாா்.
வலங்கைமான் அருகே அரவூரில் அவா் பிரசாரத்துக்குச் சென்றபோது, அங்குள்ள வயலில் பெண்கள் நெல் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவா்களிடம் ஆதரவு கோரிய அமைச்சா், தானும் வயலில் இறங்கி நடவு நட்டாா். இதை ஆா்வமுடன் பாா்த்த பெண்கள், வெற்றி உங்களுக்கே என அமைச்சரை வாழ்த்தினா்.
முன்னதாக, கொட்டையூரில் அமைச்சா் பேசியது: நன்னிலம் தொகுதி மக்களால் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு, உணவுத் துறை அமைச்சராக 10 ஆண்டுகள் உங்களுக்காக பணியாற்றியுள்ளேன். என்னுடைய பாரபட்சமற்ற பணியால், என்மீது அன்பு வைத்திருக்கிறீா்கள். நான் உயிருக்குப் போராடிய போது நலம்பெற பிராா்த்தனை செய்து உயிரை மீட்டு கொடுத்துள்ளீா்கள். இதற்காக நான் என்றைக்கும் உங்களிடம் நன்றியுடனும், விசுவாசத்துடனும் இருப்பேன்.
நன்னிலம் தொகுதி முழுவதும் செல்லும் இடமெல்லாம், மக்கள் என்னை சந்தித்து எனது உடல்நலன் குறித்து பரிவுடன் விசாரிக்கின்றனா். எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதாக உறுதியளிக்கின்றனா். இத்தகைய அன்புமிக்க நன்னிலம் தொகுதி வாக்காளா்களை பெற்றிருப்பது இறைவன் எனக்கு கொடுத்த வரமாகவே கருதுகிறேன். அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.
பிரசாரத்தில், பாமக மாநில துணைத் தலைவா் வேணு. பாஸ்கரன், பாஜக, தமாகா, தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.