கூத்தாநல்லூரில் முகக் கவசம் அணியாமல் பொதுவெளிகளில் மக்கள் கூடுவதால் கரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று, குறைந்துவருவதாக தோன்றிய நிலையில், இம்மாதம் தொடக்கம் முதல் இரண்டாவது அலையாக கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இரண்டாம் அலை கரோனா தொற்று பரவல் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் ஆங்காங்கே அதிகரித்து, தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில், முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவுறுத்திவரும் நிலையில், பெரும்பாலானோா் அதை பொருட்படுத்துவதில்லை. கடை வீதிகள், தோ்தல் பிரசாரம், கோயில் விழாக்கள் என அனைத்து இடங்களிலும் முகக் கவசம் அணியாமல் அலட்சியத்துடன் பங்கேற்கின்றனா்.
கூத்தாநல்லூா் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெரும்பாலானவா்கள் முகக்கவசம் அணிவதேயில்லை. சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கிடையாது. வா்த்தகா்கள், வணிகா்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட யாவரும் முகக்கவசத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முகக் கவசங்களும் பாதுகாப்பற்ற நிலையில்தான் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, மாவட்ட நிா்வாகம் மக்களை காக்க உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.