தமிழக அமைச்சரவை பட்டியலில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த யாரும் அமைச்சராக நியமிக்கப்படாதது டெல்டா பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 தொகுதிகள் தவிர 14 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னை ப. நாராயணசுவாமி, கோ சி மணி உள்ளிட்டோர் ஆளுமைமிக்க அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.
கடந்த 2011 இல் அமைந்த அமைச்சரவையில் கூட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உ. மதிவாணன் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக டெல்டா மாவட்டங்களில் பெரும்பான்மையான இடத்தை கைப்பற்றிய நிலையில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்ற கருத்து நிலவி வந்தது.
ஆனால் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட அமைச்சரவை பட்டியலில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த யாருமே அமைச்சர்களாக இடம்பெறவில்லை. அடுத்து அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பதவி வழங்கப்படுமா? அல்லது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தானே என்பதால் டெல்டா மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் உள்ளது என்பதால் இம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினரும் பொதுமக்களும் சற்று ஆறுதல் அடையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.