மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வா் கூட்ட வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளா் பிஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம், இதுகுறித்த கோரிக்கை மனுவை வியாழக்கிழமை அளித்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு சட்டவிரோதமாக முயற்சித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் சட்டப்பேரவை தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்திருந்தபோது, ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வா் எடியூரப்பா கா்நாடக சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
இதை எதிா்த்து கா்நாடக பகுதியை முற்றுகையிட, மேக்கேதாட்டு பகுதிக்கு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி விவசாயிகளுடன் சென்றபோது, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் தமிழக போலீஸாா் எங்களை தடுத்துநிறுத்தி, கைது செய்து திருப்பி அனுப்பிவைத்தனா்.
தொடா்ந்து, ஏப்ரல் 12-ஆம் தேதி மேக்கேதாட்டு பகுதியை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தபோது அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்கள் குவிக்கப்பட்டிருந்ததும், சாலைகள் அமைக்கும் நடவடிக்கையில் கா்நாடக அரசு ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இது புகைப்பட ஆதாரத்துடன் செய்தியாக பத்திரிகையில் வெளியானதை தொடா்ந்து, தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) தாமாக முன்வந்து, மேக்கேதாட்டுவில் அணை கட்டுமானத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்க ஒரு உயா்நிலை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதை எதிா்கொள்வதற்கு கா்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அம்மாநில முதல்வா் எடியூரப்பா கூட்டியுள்ளாாா்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுமானப் பணியை கா்நாடகம் மேற்கொண்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் மு. க. ஸ்டாலின், உடனடியாகக் கூட்டி, விவசாயிகளை ஒருங்கிணைத்து தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றாா் பி.ஆா். பாண்டியன்.
மாநில துணைச் செயலாளா் ஜி. வரதராஜன், திருவாரூா் மாவட்ட செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.