நீடாமங்கலத்தில் தாய் இறந்த நாளில் அவருக்கு திதி கொடுத்துவிட்டு மகன் ரயில்முன் பாய்ந்து சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பையன். இவரது பெயரன் வைரமணி (22). இவா் நீடாமங்கலத்தில் முடிதிருத்தும் கடையில் பணியாற்றி வந்தாா். வைரமணியின் தாய் முருகேஸ்வரி ஏற்கெனவே இறந்துவிட்டாா். தந்தை நடராஜன் வைரமணியை பிரிந்து தனியாக வேறு ஊரில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வைரமணி தனது தாயின் இறந்த நாளான சனிக்கிழமை அவருக்கு திதி கொடுத்துவிட்டு மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நீடாமங்கலம் - வையகளத்தூா் ரயில்வே கேட்டுக்கு இடையில் பாப்பையந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை மாலை காரைக்காலில் இருந்து எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த தஞ்சாவூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து வைரமணியின் சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.