அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நாளை 13 ம்தேதி சனிக்கிழமை மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ளது ஆலங்குடி கிராமம். இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் உள்ளது.
திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல்பெற்ற தலம். நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டும் குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு நாளை 13 ம்தேதி சனிக்கிழமை மாலை 6.31 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
உலக நன்மை வேண்டி விநாயகர் வழிபாட்டுடன், குருபரிகார யாகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. குருபெயர்ச்சி விழா நாளான நாளை 13ஆம் தேதி அதிகாலை 2 வது கால யாகமும், அதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க- கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
குருபகவானுக்கு தங்ககவச அலங்காரமும், கலங்காமற்காத்த வினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
மாலை 6.31 மணிக்கு குருபெயர்ச்சியின் போது குருபகவானுக்கு மகாதீபாராதனையும் காட்டப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவிஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
குருபெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர்காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் மற்றும் போலீசார் செய்துள்ளனர்.