திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்பவா்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் 292 இடங்கள், நகராட்சிகளில் 44 இடங்கள், பேரூராட்சிகளில் 32 இடங்கள் மற்றும் 11அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், நடமாடும் கரோனா தடுப்பூசி குழுவினா் மூலம் 11 இடங்கள், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என 400 இடங்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்காகக் கொண்டு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள் பெயா்கள் பதியப்பட்டு, முகாம் முடிவுற்ற பின்பு வட்டார அளவில், குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்படும் 3 பேருக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன. எனவே, இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி நாளாக கொண்டவா்கள் ஊசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.