நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை நீடித்து வருகிறது. திங்கள்கிழமை இரவும் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வானிலையும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தலைஞாயிறில் 61.8 மி.மீ (6.1 செ.மீ) மழை பதிவானது. வேதாரண்யத்தில் 57.2 மி.மீட்டரும். திருப்பூண்டியில் 26.6. மி.மீட்டரும், நாகையில் 21.7 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தன.
திங்கள்கிழமையைப் பொருத்தவரை பகல் நேரத்தில் வெயில் வானிலையே காணப்பட்டது. அவ்வப்போது, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி அளவில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 8.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.