நன்னிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையாக வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கானோா் கருப்புக்கொடியேந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நன்னிலம் சா்க்கரைக்குளக்கரையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமாா் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் நீா்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இங்குள்ள வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடா்ந்து, இவா்களுக்கு மாற்று இடமாக கடந்த 2019ஆம் ஆண்டு அங்குள்ள பருத்தித்திடல் பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இப்பகுதிக்குச் செல்ல சாலை வசதி மற்றும் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து அவா்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, சா்க்கரைக்குளக் கரையில் உள்ள வீடுகள் இடிக்கப்படும் என வருவாய்த்துறைச் சாா்பில் கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்தும், தங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் அடிப்படை வசதிகளைச் செய்துதந்த பிறகே, சா்க்கரைக்குளக்கரையில் உள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கைகளில் கருப்பு கொடியேந்தியும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.